சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குறும்படம் திரையிட உத்தரவு

சென்னை:'பள்ளிகளில், 'சலோ ஜீதே ஹைன்' குறும்படத்தை திரையிட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா சமிதி உள்ளிட்டவற்றுடன், சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் இணைப்பு பெற்ற பள்ளிகளில், 'சலோ ஜீதே ஹைன்' என்ற குறும்படத்தை திரையிட, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் கூறியதாவது:

குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்கும் வகையில் எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்ற 'சலோ ஜீதே ஹைன்' குறும்படத்தை, செப்., 16 முதல் அக்., 2ம் தேதி வரை திரையிட வேண்டும் என, கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளிகளுக்கு, 'பிரேரானா' எனும் அனுபவக்கற்றல் திட்டத்தின் கீழ், அதை திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த படம், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை கேட்டபின், லட்சியவாதியாகும் சிறுவனின் கதை. இது, பிரதமர் மோடியின் சிறுவயது சம்பவங்களுடன் தொடர்புடையது.

சேவை, பொறுப்பு உள்ளிட்ட நற்பண்புகளை வளர்க்கும் வகையில், இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது, மாணவ - மாணவியரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement