தமிழகத்தில் சிறுநீரகத் திருடர்களுக்கான அரசு: சாடுகிறார் அன்புமணி

சென்னை:தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா? என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தையே அதிர வைத்த நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து தென்மண்டலக் காவல்துறை தலைமையில் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறுநீரகத் திருட்டு விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய அரசே குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப் பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் கொள்ளையடித்ததாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து தான் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கிட்னி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க அரசு முயல்வதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் நிஷா , சிலம்பரசன் , கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆணையிட்டது.
இது தொடர்பாக செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். அதன்படி இன்னும் 4 நாள்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சிறுநீரகங்கள் திருடப்பட்டு பிறருக்கு பொருத்தப்பட்ட நிகழ்வுகள் நடந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது; சிறுநீரகத் திருட்டில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தரகரும் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர்கள் சிக்கிக் கொண்டால் சிறுநீரகத் திருட்டின் பின்னணியில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்பதால் தான் இந்த விசாரணையை தடுக்க திமுக அரசு முயல்கிறது.
தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா? எனத் தெரியவில்லை. சிறுநீரகத் திருட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், சுப்ரீம்கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்; சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் தள பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்: பாக், துருக்கி கொடிகளை வெளியிட்டு அத்துமீறல்
-
அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது
-
ஹெச்1 பி விசா கட்டண குழப்பங்கள்: இந்தியர்களுக்காக அவசர உதவி எண்களை வெளியிட்ட தூதரகம்
-
ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்
-
மகாளய அமாவாசை: புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
-
அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்