பதிவில்லாத கட்டுமான திட்டங்கள் மீதான புகாரை விசாரிக்க முடியாது ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

சென்னை:

'ரியல் எஸ்டேட் சட்டப் படி, முறையாக பதிவு செய்யப்படாத கட்டுமான திட்டங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க முடியாது' என, ரியல் எஸ்டேட் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு, 100 அடி சாலையில், ஹரிஹந்த் பவுண்டேஷன்ஸ் நிறுவனம் சார்பில், 1996ல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு 15 மாடிகள் கொண்ட ஐந்து கட்டடங்களில், 312 வீடுகள் கட்டப்பட்டன.

இத்திட்டம், 64.27 கிரவுண்ட் நிலத்தில் செயல்படுத்தப்பட்டது. இதில், 10 சதவீத நிலம் திறந்த வெளி ஒதுக்கீட்டுக்கு போக, 57.84 கிரவுண்ட் நிலம், அத்திட்டத்தில் வீடு வாங்கியவர்களுக்கு, யு.டி.எஸ்., என்ற பிரிபடாத பங்காக பிரித்து கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், இதன்படி கட்டு மான நிறுவனம், யு.டி.எஸ்., ஆக வழங்கிய நிலம் குறைவு என்றும், கூடுதல் நிலத்தை ஒதுக்க கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக, அங்கு வீடு வாங்கிய ஜெயராஜ் சிவன் உள்ளிட்ட சிலர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.

ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர்கள் எல். சுப்ரமணியன், எம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் கோரும் கூடுதல் யு.டி.எஸ்., வழங்க, அத்திட்டத்தில் வாய்ப்பு இல்லை என, கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இத்திட்டம் ரியல் எஸ்டேட் சட்டப்படி இந்த ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை.

ரியல் எஸ்டேட் சட்ட வரம்புக்குள் வராத, இது போன்ற திட்டங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement