தொடர்ந்து அத்துமீறும் ரஷ்யா; டிரோன் சுவர் அமைக்க ஐரோப்பிய நாடுகள் திட்டம்

கோபன்ஹேகன்: ரஷ்யா டிரோன் அச்சுறுத்தலில் தங்களின் நாடுகளை பாதுகாக்கும் விதமாக, டிரோன் சுவர் எனப்படும் தொடர் சென்சார் பாதுகாப்பு ஏற்படுத்துவது தொடர்பாக டென்மார்க்கில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.



ஐரோப்பாவில் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வான் எல்லை வழியாக ரஷ்யா போர் விமானங்கள், தொடர்ந்து அத்துமீறி பறந்து வருவது பெரும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. குறிப்பாக போலந்து மற்றும் எஸ்தோனியா வான் எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.


டிரோன் அச்சுறுத்தல் காரணமாக டென்மார்க்கின் விமான நிலையங்களை மூடப்பட்டன. இது தங்களுக்கு எதரான ரஷ்யாவின் மிரட்டலாகவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு கருதுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.


இந்த நிலையில், ரஷ்யா டிரோன் அச்சுறுத்தலில் தங்களின் நாடுகளை பாதுகாக்கும் விதமாக, டிரோன் சுவர் எனப்படும் தொடர் சென்சார் பாதுகாப்பு ஏற்படுத்துவது தொடர்பாக, கோபன்ஹேகனில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த டிரோன் தடுப்பு சென்சார்கள், அத்துமீறி தங்களின் எல்லைப் பகுதிக்குள் நுழையும் நுழையும் டிரோன்களை கண்டறிந்து வீழ்த்த முன்னெச்சரிக்கை செய்யும்.


ஐரோப்பிய உச்சி மாநாடு நடக்கும் டென்மார்க்கிற்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, படைகளையும் டிரோன் எதிர்ப்பு அமைப்புகளையும் சில ஐரோப்பிய நாடுகள் அனுப்பி வைத்துள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஆணையம் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன் கூறுகையில், "ரஷ்யா நம்மை சோதிக்க முயற்சிக்கிறது. ஆனால் ரஷ்யா நம்மிடம் பிளவு மற்றும் பதட்டத்தை விதைக்க முயற்சிக்கிறது. இது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்றார்.

Advertisement