தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு: ஒரு சவரன் ரூ.89,600!

1

சென்னை: சென்னையில் இன்று (அக் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.89,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,200க்கு விற்பனை ஆகிறது.


சர்வதேச நிலவரங்களால், கடந்த மாதத்தில் இருந்து, நம் நாட்டில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் தங்கம் கிராம் 10,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்பனையானது.

ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (அக் 06) காலை, தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில் 11,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, 88,480 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.



நேற்று மாலை, தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் 65 ரூபாய் அதிகரித்து, 11,125 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 89,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், இன்று (அக் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.89,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,200க்கு விற்பனை ஆகிறது.

இந்த ஆண்டு ஜன., 1ல் தங்கம் கிராம் 7,150 ரூபாய்க்கும், சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. எனவே, கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 4,050 ரூபாயும், சவரனுக்கு 32,400 ரூபாயும் அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


@block_P@

ஒரு நாளுக்கு 2 முறை!

இது தொடர்பாக, நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தங்கத்துக்கான 'டிமாண்ட்' அதிகரித்துள்ளது. தங்கம் விலை இனி தினமும் 2 முறை மாறலாம். முன்பு பணம் செலுத்தினால் அரை மணி நேரத்தில் தங்க கட்டிகள் கிடைக்கும்.


ஆனால் தற்போது ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இன்னும் பல மடங்கு தங்கம் விலை உயரும். என் வாழ்நாளில் இப்படி ஒரு நிலையை பார்த்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.block_P

Advertisement