கட்டாக்கில் நீடிக்கும் வன்முறையால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம் மேலும் நீட்டிப்பு

1

கட்டாக்; கட்டாக்கில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை ஒடிசா மாநில அரசு நீட்டித்துள்ளது.

ஒடிசாவில், துர்கா சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் போது இருதரப்பினர் இடையே மோதல் மூண்டது. ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் வன்முறையாக மாற, கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கட்டுக்கடங்காத வன்முறைச் சம்பவங்களினால் 31 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 10 போலீசாரும் அடக்கம். கலவரம், வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின.

மக்கள் மத்தியில் இந்த தகவல்கள் பெரும் பீதியை ஏற்படுத்தியதால் கட்டாக் உள்ளிட்ட 13 நகரங்களில் இணையதள சேவைக்கு 36 மணி நேரம் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. மேலும் அதிகாரப் பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந் நிலையில், இந்த தற்காலிக தடை இன்று (அக்.7) மாலை வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள சூழல் குறித்து ஆராய வருவாய்துறை உயரதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி குஹாபூனம் தபாஸ்குமார் கூறியதாவது;

இந்த விவகாரத்தில் எவ்வளவு விரைவாக அமைதியை நிலைநாட்ட முடியுமோ அவ்வளவு விரைவாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு பதியப்படும்.

சமூகத்தில் அமைதி தேவை. அனைவரும் விழாவை அமைதியாக முறையில் கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இவ்வாறு வருவாய்த்துறை அதிகாரி குஹாபூனம் தபாஸ்குமார் கூறினார்.

புவனேஸ்வர்-கட்டாக் போலீஸ் கமிஷனர் தேவ்தத்தா சிங் கூறுகையில், கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து அக்.8 காலை 10 மணி வரை நகரத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதுவரை விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். பாதுகாப்பாக உணருவதாக மக்கள் எங்களிடம் தெரிவித்து இருக்கின்றனர். விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் என்று கூறினார்.

Advertisement