பஸ்சை விட்டு பிரிய மனமில்லாத பரமசிவம்.


நான் கடைசியா ஒரு முறை இந்த பஸ்சை ஓட்டிக்கொள்ளவா?என்று கேட்ட டிரைவர் பரமசிவத்தின் வார்த்தையில் மட்டுமல்ல அந்த வார்த்தையை கேட்டவர்கள் கண்களிலும் கண்ணீர்

எதற்காக இந்த நெகிழ்ச்சி கண்ணீர்

மதுராந்தகம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்த பரமசிவம் (வயது 60, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த காவாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்) தனது அரசு பேருந்து ஓட்டுநர் வாழ்க்கையில் இருந்து ஒய்வு பெறும் நாளை நெகிழ்ச்சிகரமாக அனுபவித்தார்.
Latest Tamil News
அவர் பொறுப்பேற்ற '100' தடம் எண் கொண்ட மதுராந்தகம்-கொடூர் பேருந்தை பணியாற்றிய கடைசி பயணமாக ஓட்டி வந்தார்.பஸ்சை ஒட்டிவந்து கடமையை நிறைவு செய்தவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பணிமனையில் நடந்தது. அவரைச் சுற்றி பணியாளர்கள், சக ஓட்டுநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு, அவருடைய 30 வருட நியாயமான, கடுமையான உழைப்பையும், மக்கள் சேவையில் காட்டிய ஒற்றுமையையும் பாராட்டினர்.

விழா நிறைவில் பரமசிவம் கடைசியாக ஒருமுறை தான் ஓட்டிய பேருந்தை ஓட்ட விரும்புகிறேன் எனக் கூறி, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அந்த வளாகத்தை ஒரு சுற்று சுற்றி வலம் வந்தவர் பின் பிரிய மனமில்லாமல் ஸ்டீரிங் வீலில் சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார் பின் பஸ்சை விட்டு இறங்கி வந்தவர் பஸ்சை சுற்றி சுற்றி வந்தவர் முன் பக்கம் வந்ததும் அதனை இருகைகளாலும் அணைத்துக் கொண்டு முத்தமிட்டு மீண்டும் ஒரு முறை கண்ணீர் விட்டார்.

மகிழ்வான தருணத்தை நெகிழ்வான தருணமாக்கிய ஓட்டுநர் பரமசிவத்தின் செயல்களால் சுற்றியிருந்தவர்கள் கண்களிலும் கண்ணீர். அவரின் நேர்த்தியான, அன்பும் கடமை உணர்வும் கொண்ட வாழ்க்கையை நினைவூட்டும் நிகழ்வாக இது அனைவரின் மனதில் நிறைந்தது. அவர் பேருந்தோடு கொண்டிருந்த ஆழமான உறவு எந்திரத்திற்கும் மனிதனுக்குமான உறவாக தெரியவில்லை அதையும் தாண்டிய அன்பாக காணப்பட்டது.

-எல்.முருகராஜ்

Advertisement