கோவையில் புத்தொழில் மாநாடு துவக்கம்; 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

கோவை: கோவை கொடிசியாவில் உலகப்புத்தொழில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில், ''2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் முனைப்புடன் செயல்படுகிறோம்'' என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.
கோவை கொடிசியா வளாகத்தில், இன்றும், நாளையும் உலக புத்தொழில் மாநாடு நடை பெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொழில்கள் வளர்ச்சி அடைகிறது என்றால் அந்த நிறுவனம் மூலம் மாநிலம் வளர்ச்சி அடையும். வளர்ச்சியின் அடையாளமாக தொழில்நிறுவனங்கள் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தைத் தேடித்தான் தொழில்துறையினர் வருவார்கள். தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நிறுவனம் நடத்தலாம் என்றே இது போன்ற மாநாடுகள் நடைபெறுகின்றன.
பொருளாதாரம்
எண்ணற்ற தொழில் முதலீடுகளையும், உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளோம். 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் முனைப்புடன் செயல்படுகிறோம். புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள் தொழில்துறைக்குள் வர வேண்டும். அதற்கான முயற்சியை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தொழில் துறையை பொறுத்த வரை, திமுக அரசு நோக்கம் தமிழகம் முழுவதும் புத்தொழில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாபெரும் கனவு
தமிழகத்தில் பெண்கள், இளைஞர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் அரசின் புது யுக தொழில் திட்டங்கள் சென்றடைய வேண்டும். அதற்காக முற்போக்கு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறோம். உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழகத்தை கட்டமைப்பது தான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. பின்தங்கி இருக்கும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று அடைவதில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் தளத்தில் புதிதாக பதிவாகி உள்ளன.
புத்தொழில் மையம்
சிறந்த புத்தொழில் கொண்ட மாநிலங்கள் பட்டியலில், 2018ம் ஆண்டு கடைசி இடத்தில் இருந்த தமிழகம், 4 ஆண்டுகளில் 2022ல் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதில் சரிபாதி நிறுவனங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சி. தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தின் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும் வகையில் ரூ.100 கோடியில் இணை உருவாக்க நிதியம் தொடங்கப்படும். இதன் மூலம் புதிய முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
300 பிரதிநிதிகள் பங்கேற்பு
ஜெர்மனி, ஆஸி., ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த, 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான 75 தொழில் வளர் மையங்கள் (இன்குபேஷன் மையம்), 10க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டு நிறுவனங்கள், உலக அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றன.
750 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்டார்ட்அப் டிஎன், தலைமைச் செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், எம்.எஸ்.எம்.இ., துறை கூடுதல் தலைமை செயலர் அதுல் ஆனந்த், அரசு பிரதிநிதிகள், தொழில் வல்லுனர்கள் பங்கேற்றனர்.




மேலும்
-
மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் வணிக ஆய்வாளர் கைது
-
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் உறுதி
-
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு
-
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்
-
கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு