சென்னிமலையில் மாயமான மாணவன் எல்.பி.பி., வாய்க்காலில் சடலமாக மீட்பு

சென்னிமலை, சென்னிமலையில் மாயமான பத்தாம் வகுப்பு மாணவன், எல்.பி.பி.,யில் (கீழ்பவானி வாய்க்கால்), சடலமாக மீட்கப்பட்டது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காட்டூர் ரோடு, ராஜீவ் நகரை சேர்ந்த கோபி-ஈஸ்வரி தம்பதி மகன் சரண், 14; காமராஜ் நகர் அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். கடந்த, 6 மற்றும் 7ம் தேதி உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் சரண் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் பள்ளி சென்றவர், 10:௦௦ மணியளவில் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டார்.



தாய் ஈஸ்வரி வேலை செய்யும், காட்டூர் ரோட்டில் உள்ள பனியன் கம்பெனிக்கு, சைக்கிளில் மாலையில் சென்றுள்ளார். ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் எனக்கூறி தாயாரிடம், 50 ரூபாய் வாங்கி கொண்டு சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை கோபி, சென்னிமலை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் தேடி வந்த நிலையில், சரண் ஓட்டிச் சென்ற சைக்கிள், பசுவபட்டி, கணபதிபாளையம் எல்.பி.பி., வாய்க்கால் கரையோரம் நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சரணின் சடலம், வாய்க்கால் புதுார் அருகில் எல்.பி.பி., வாய்க்காலில் மீட்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், சரண் சரியாக பள்ளிக்கு செல்லாததால், பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement