ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்கப்படும்: ஜெய்சங்கர் அறிவிப்பு

12

புதுடில்லி: ''ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்கும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி இந்தியா வந்துள்ளார். டில்லியில் அமிர்கான் முட்டாகியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா தனத தூதரகத்தை மீண்டும் திறக்கும்.
இந்தியா ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய பயணம் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும்.



பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பங்களின் போது நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

நெருங்கிய நண்பர்



ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது முதலில் உதவி செய்த நாடு இந்தியா. ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராக பார்க்கிறது.



வர்த்தகம் மற்றும் இருநாடு மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து எந்த தீய சக்தியும், இந்தியாவிற்கு எதிராக செயல்பட அனுமதிக்க மாட்டோம். டில்லியில் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, காபூல் தனது பிரதேசத்தை யாருக்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதிக்காது என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் காபூலில் தலிபான் அமைப்பினரின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில் முட்டாகி தெரிவித்துள்ளார்.


கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றிய பிறகு இந்தியா தூதரகங்களை மூடியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு மீண்டும் காபூலில் தூதரகம் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, இந்தியா- ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

Advertisement