உருக்குலைந்த காசாவை இந்தியா தான் மறுகட்டமைக்க வேண்டும்; பாலஸ்தீன தூதர் வேண்டுகோள்

2

புதுடில்லி: போரால் உருக்குலைந்து போன காசா நகரை இந்தியாவை விட்டால் வேறு யாராலும் கட்டமைக்க முடியாது என்று இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹமாஸூக்கு எதிரான போரில் இஸ்ரேல் காசாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இரு ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில் சுமார் 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்களின் தலையீட்டின் காரணமாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. '

முதற்கட்டமாக, பிணைக்கைதிகள் விடுவிப்பு, காசாவில் உள்ள படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பாலஸ்தீன மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், காசாவை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாக இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அப்துல்லா அபு ஷாவேஷ், இந்தியாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது; இந்தியா தான் உலகின் சாம்பியன். காசாவில் மனிதாபிமான பேரழிவை முடிவுக்கு கொண்டு வருவதிலும், போருக்கு பிந்தைய மறுகட்டமைப்பில் இந்திய முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்தியா இல்லையென்றால், பிறகு யார்?. இந்தியாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் இஸ்ரேலுடனான சிறந்த உறவின் மூலம், பாலஸ்தீனம் பாதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட 67 ஆயிரம் பேரில், முழுக்க முழுக்க மக்கள் மட்டுமே. ஹமாஸைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஊட்டச்சத்து குறைவு, உணவுப்பற்றாக்குறை காரணமாக 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு ஆபரேஷன்கள் மயக்க மருந்து இல்லாமல் நடந்துள்ளன. மயக்க மருந்து இல்லாமலே பலரது கை மற்றும் கால்கள் அறுத்து எடுக்கப்பட்டன.

காசாவில் நிகழ்த்தப்பட்டது வன்முறை அல்ல, இனப்படுகொலை என்று
சர்வதேச அமைப்புகளே சொல்லி வருகின்றன. இஸ்ரேல் கண்காணிப்பு குழுக்கள் கூட இது இனப்படுகொலை என்று அறிவித்தன, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement