பட்டியலினத்தவருக்கு வீடு அமைக்கும் திட்டம் உயர்நீதிமன்றம் அவகாசம்

மதுரை: பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து பயனின்றி காலியாக உள்ள இலவச வீட்டுமனைகளை தகுதியானவர்களுக்கு வழங்கி வீடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்த தாக்கலான வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடற்ற பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய இலவச வீட்டுமனைகள் பயனின்றி காலியாக உள்ளன. வீட்டுமனைகள் வசிப்பிடத்திலிருந்து துாரமாக உள்ளன. பொருளாதார நிலை சரியில்லாததால் வீடுகள் கட்ட முடியவில்லை.

மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ரூ.5 லட்சத்தில் வீடு கட்டித் தரும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதை பட்டியலின மக்களுக்கும் விரிவுபடுத்தினால் பயனடைவர்.

பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து பயனின்றி காலியாக உள்ள இலவச வீட்டுமனைகளை மாவட்டந்தோறும் அடையாளம் காண வேண்டும். அவற்றை தகுதியான பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சத்தில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் பதில் மனு செய்ய அரசு வழக்கறிஞர் மகாராஜன் அவகாசம் கோரினார். அவகாசம் அளித்த நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement