காசாவில் போர் முடிவடையாது: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

2

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.



காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த அமைதி திட்டத்தின் படி தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்கள் இடையே மோதல் எழுந்து வருகிறது. காசா மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் உள்ளே சென்று ஹமாஸ் அமைப்பினரை கொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று டிரம்பும் அண்மையில் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தார்.

பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறுவதாகும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது.



இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பதே நோக்கமாக கொண்டுள்ளோம்.


இது வெற்றிகரமாக முடிந்ததும் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இதுவரை உயிருடன் உள்ள பிணைக்கை திகள் 20 பேரை விடுவித்துள்ளது. இஸ்ரேல் 135 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மற்றும் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement