மக்காச்சோளத்தை உலர்த்த களம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோள மணிகளை உலர்த்துவதற்கு போதிய உலர் களம் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தியாகதுருகம் சுற்றுவட்டார பகுதியில் ஆண்டுதோறும் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

கம்பு பயிரிடுபவர்களுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. பருத்தி பயிரில் காய் முற்றி பஞ்சு வெளிப்படும் தருணத்தில் கனமழை மற்றும் பணி ஈரத்தால் பஞ்சு வீணாகி நஷ்டம் ஏற்படுகிறது. உளுந்து பயிரில் போதிய மகசூல் கிடைப்பதில்லை.

இதனால் கடந்த சில ஆண்டுகளில் மக்காச்சோள சாகுபடிக்கு விவசாயிகள் மாறினர். மக்காச்சோள விதைப்பு பணி முடிந்து அதை அறுவடை செய்யும் வரை பராமரிப்பது எளிதாக உள்ளது. அதேபோல் எதிர்பார்த்த விலையுடன் லாபம் கிடைக்கிறது.

இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயந்திரங்களைக் கொண்டு மக்காச்சோளம் கதிர்களை அறுவடை செய்து மணிகளை பிரித்து எடுத்தாலும் அதனை உலர்த்துவது மிகுந்த சவாலாக உள்ளது.

இப்பகுதியில் போதிய உலர் களம் இல்லாதது மக்காச்சோளம் மணிகளை காய வைக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர். ஒரே நேரத்தில் பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோள அறுவடை பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் வேறு வழி இன்றி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் மக்காச்சோளம் மணிகளை கொட்டி உலர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் அவ்வப்போது விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. எனவே, மக்காச்சோள மணிகளை மட்டுமின்றி விவசாயிகள் சாகுபடி செய்யும் தானியங்களை உலர்த்துவதற்கு போதிய களம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement