மும்பை- லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

3


மும்பை: மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனது.

இதனால் பயணிகள் 200க்கும் மேற்பட்டோர் கடும் அவதி அடைந்தனர். ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மும்பையிலிருந்து லண்டனுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படவிருந்த விமானம் தாமதமாகி இன்னும் புறப்படவில்லை. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, தாமதம் ஏற்பட்டுள்ளது.



தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடக்கிறது. விமானம் மதியம் 1 மணிக்கு புறப்படும். பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement