நவம்பர் 12ல் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

1


சென்னை: தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், நாளை இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.



தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.,08) கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (நவ 09) கனமழைக்கு வாய்ப்புள்ளது.


திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களில் நவ.12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நவம்பர் 13ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement