பயிர் காப்பீடு செய்ய வேளாண் துறை அழைப்பு

தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரகுராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு;

விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு இயற்கை இடரால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தியாகதுருகம் சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ரபி பருவ நெற்பயிர் காப்பீடு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 538 காப்பீட்டு தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களை கொண்டு காப்பீடு செய்யலாம்.

பதிவு செய்யும்போது விவசாயிகளின் பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் அதன் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகியவற்றை சரியாக குறிப்பிட வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து குறைந்த பிரிமியம் செலுத்தி அதிகபட்ச காப்பீடு செய்து அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement