குடிநீர் கசிவை தடுக்க திட்டம் 'புளூ போர்ஸ்' இன்று துவக்கம்

பெங்களூரு: ''குடிநீர் கசிவை தடுக்க 'புளூ போர்ஸ்' சிறப்புப் படை மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பம் திட்டத்தை துணை முதல்வர் சிவகுமார் இன்று துவக்கி வைக்கிறார்,'' என, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

குடிநீர் கசிவை தடுக்க 'புளூ போர்ஸ்' சிறப்பு படை மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பம் திட்டத்தை துணை முதல்வர் சிவகுமார் இன்று துவக்கி வைக்கிறார்.

புளூ போர்ஸ் படையினர், இந்த வாரத்தில் இருந்து தங்கள் பணியை துவங்குவர். வாரியத்தில் துணை மண்டலங்களுக்கு தலா மூன்று பேர் கொண்ட 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர், வடிகால் சட்டவிரோத இணைப்பை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். நீர் கசிவு காரணமாக, வாரியத்திற்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இதை தடுத்து, நியாயமான நீர் வினியோகத்தை உறுதி செய்வதும் இப்படையின் பணி.

கசிவு ஏற்படும் இடத்தை சரியாக கண்டறிந்து, தேவையற்ற சாலைகளை தோண்டுவதை தடுக்க, தொழில்நுட்பத்தை பயன்படுத்த, ரோபோடிக் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம், பொது மக்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாத வகையில், சாலையில் பள்ளம் தோண்டாமல், கசிவை கண்டறிந்து பிரச்னையை நிவர்த்தி செய்யும்.

சட்ட விரோதமான குடிநீர் இணைப்புகளால், வாரியத்துக்கு இழப்பு ஏற்படுகிறது அனைத்து விதிமீறல்களையும் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பம், சட்டத்தை செயல்படுத்துவது அவசியம். இந்த புதுமையான முயற்சியால், 28 சதவீதம் குடிநீர் கசிவு குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement