எப்படியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்கும் எண்ணம்; இபிஎஸ் மீது கம்யூ. பாய்ச்சல்

5

மதுரை: எப்படியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று இபிஎஸ் எண்ணுகிறார் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே கோடிக்கணக்கான விவசாய பெருமக்கள், கிராமப்புற மக்களுடைய வேலைவாய்ப்பை பறித்து, அவர்களை பட்டினி போட்டுக் கொல்கிற ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மாற்ற வி-பி-ராம்-ஜி என்று மாற்றி புதிய சட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

முதலாளிகளுக்கு இந்த 10 ஆண்டுகாலத்தில் 16 லட்சம் கோடி ரூபாயை வாராக்கடன் என்ற பெயரில் இந்த அரசாங்கம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் ஏழைகளுக்கு வருடத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் கூட திட்டத்திற்காக ஒதுக்கப்படவில்லை. இந்த ரூபாயை மத்திய அரசு ஒதுக்குவது பெரும் சிரமமான காரியம் அல்ல.

ஆனால் மாநில அரசாங்கம் மீது பழியை போட வேண்டும் என்பதற்காகவே ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாநிலங்கள், 40 சதவீதம் மாநில நிதியை ஒதுக்க வேண்டும் என்று புதிய சட்டத்தை குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

ஏற்கனவே 100 நாள் இருந்தபோதே 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. 125 நாள் என்று அவர்கள் அறிவித்திருப்பது என்பது ஒரு ஏமாற்று வித்தையே தவிர, மக்களுக்கு வேலை வழங்க போவதில்லை. இவ்வளவு மோசமான சட்டத்தை அதிமுக ஆதரித்து இருக்கிறது.

அவர் (இபிஎஸ்சை .குறிப்பிடுகிறார்) சொன்னார் மஹாத்மா காந்தி என்ற பெயரை எடுத்துக்கப்படாது என்று சொல்லி... அவருடைய அந்த முணுமுணுப்பை கூட அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. கூட்டணி கட்சித் தலைவர் கேட்கிறாரே, பெயரை மட்டுமாவது வைத்துக் கொள்வோம் என்ற முறையில் அவர்கள் இபிஎஸ்சுக்கு மதிப்பளிக்கவில்லை.

ஆசை வெட்கமறியாது என்று சொல்வார்கள், இபிஎஸ்சுக்கு இப்போது எப்படியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும். அதற்கு யாரையாவது பிடித்தாவது, என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. பாஜ அரசு எதை கொண்டு வந்தாலும், எதை செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்கிற நிலைப்பாட்டை இபிஎஸ் எடுத்திருக்கிறார்.

இந்த பிரச்னை என்பது தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. தமிழகத்தின் முன்னேற்றம், கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் அதிலே இப்படி ஒரு நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருப்பது என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த புதிய சட்டத்தை திரும்ப பெறவேண்டும். மஹாத்மா காந்தி பெயரிலான அந்த சட்டத்தை திரும்பவும் நடைமுறைப்படுத்துவதற்கு பாஜ அரசு முன் வர வேண்டும். அதுவரை கூட்டணிக்கட்சிகள் சார்பில் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு சண்முகம் பேட்டியில் கூறினார்.

Advertisement