வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, டிசம்பர் 27,28, ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி, அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை:
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிசம்பர் 27, 28, மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


படிவம்-6:

இந்த சிறப்பு முகாமில்,வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

படிவம்- 7:
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.


படிவம் 8:

முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement