காணாமல் போகிறது ராவ் கட்சி?

'இன்னும் சில ஆண்டுகளுக்கு, இவரை அசைக்கவே முடியாது போலிருக்கிறதே...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டியை பார்த்து பொறாமைப்படுகின்றனர், எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர்கள்.

'தெலுங்கானாவில், எங்கள் கட்சியை தவிர வேறு கட்சி எதுவுமே இல்லை; நாங்கள் தான் இங்கு ராஜா...' என கூறி வந்த, அம்மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு, 2023 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், படுதோல்வியே பரிசாக கிடைத்தது. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலிலும், அவரது கட்சி மண்ணை கவ்வியது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, இளைஞரான ரேவந்த் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். இங்கு, ஹைதராபாத் நகரில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதிக்கு, சில மாதங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடந்தது. ஏற்கனவே பாரத் ராஷ்ட்ர சமிதி வசமிருந்த இத் தொகுதியை, இம்முறை காங்., கைப்பற்றியது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரசே அமோக வெற்றி பெற்றது. பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு குறைந்த இடங்களே கிடைத்தன.

இந்த தொடர் வெற்றிகளால் உற்சாகமடைந்துள்ள ரேவந்த் ரெட்டி, 'இன்னும், 10 ஆண்டுகளுக்கு நான்தான் தெலுங்கானாவின் முதல்வர்...' என, பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

சந்திரசேகர ராவ் தரப்போ, 'அப்படியானால், இன்னும், 10 ஆண்டுகளுக்குள் நம் கட்சியே காணாமல் போய் விடுமே...' என, புலம்புகிறது.

Advertisement