தி.மு.க., இளைஞரணி பதவிகள் வ.செ.,க்கள் சிபாரிசு புறக்கணிப்பு: அதிருப்தியால் த.வெ.க.,வுடன் 'டீலிங்'

1

மதுரை: மதுரையில் தி.மு.க., இளைஞரணியில் நிர்வாகிகள் நியமனத்தில் வட்டச் செயலாளர்கள் (வ.செ.,) சிபாரிசு புறக்கணிக்கப்பட்டதால் பதவி கிடைக்காத இளைஞர்கள் 'ரூட்'டை மாற்றி த.வெ.க., உடன் 'டீலிங்' பேச துவங்கியுள்ளனர்.

மாவட்டம் வாரியாக தி.மு.க., இளைஞரணியில் கிளை, வட்ட, பாக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவி அறிவிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் நகர், வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியானது.

குறிப்பாக மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகளுக்கும் இளைஞரணி அமைப்பாளர், அவர்களுக்கு கீழ் தலா 5 துணை அமைப்பாளர்கள்,பாக அமைப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதில் பெரும்பாலான வட்டச் செயலாளர்கள் சிபாரிசு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டிய நபர்கள், உறவினர்களுக்கு பொறுப்புக்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளதால் தி.மு.க., வட்ட, பகுதி செயலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: கட்சி சார்பில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் வட்ட செயலாளர்கள் தான் அடிப்படை.

மாவட்ட செயலாளர்களின் உத்தரவுகளை களத்தில் நின்று நிறைவேற்றுபவர்கள் நாங்கள். ஆனால் நாங்கள் மதிக்கப்படுவதில்லை.

வார்டு இளைஞரணியில் நாங்கள் சிபாரிசு செய்தவர்கள் பொறுப்புகளில் இருந்தால் தான் தேர்தல் பணியை எளிதாக பார்க்க முடியும்.

மாநகராட்சி பகுதியில் கவுன்சிலர்கள் கை தான் ஓங்குகிறது. இதனால் வ.செ.,க்கள் சிபாரிசு செய்த இளைஞர்கள் பலர் த.வெ.க., கட்சிக்கு மாறி வருகின்றனர். தற்போது அரசியல் கட்சிகளில் இளைஞர்களுக்கு 'டிமாண்ட்' அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க.,வுக்கு சென்றால் பதவி எதிர்பார்க்க முடியாது என்பதால் த.வெ.க.,வுக்கு 'ரூட்'டை மாற்றுகின்றனர். அங்கு அவர்கள் நினைத்தது போல் பதவிகளை பெற அதிக வாய்ப்பும் உள்ளது. தி.மு.க., தலைமை இவ்விஷயத்தில் முடிவு எடுத்து, இளைஞர்களை கட்சிக்குள் தக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement