காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை

5


சென்னை: காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ சதன் திருமலை குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ சதன் திருமலை குமார். கடந்த 2016ம் ஆண்டு நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கடன் வாங்கியிருந்தார். தனது தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கியிருந்தார். இதற்காக ரூ. 50 லட்சம் மதிப்பு கொண்ட இரண்டு காசோலையை சதன் திருமலைக்குமார் திருப்பிக் கொடுத்தார். இந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது சதன் திருமலை குமார் வங்கிக்கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.


இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பிறகு இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், காசோலை மோசடி வழக்கில் சதன் திருமலைகுமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பணத்தை இரண்டு மாதங்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை இரண்டு மாதம் நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement