செக் மோசடி வழக்கில், ம.தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு ஆண்டு சிறை!

சென்னை : காசோலை மோசடி வழக்கில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் தனி தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் டி.சதன் திருமலைக்குமார்.

திரும்பி வந்தது கடந்த 2016 மார்ச்சில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, 'நியூ லிங்க் ஓவர்சீஸ் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்திடம், தொழில் அபிவிருத்திக்கு என முதல் கட்டமாக, 51 லட்சத்து 9,212 ரூபாயும்; இரண்டாம் கட்டமாக, 80 லட்சத்து 59,107 ரூபாயும் கடனாக பெற்று உள்ளார்.

இதில், குறிப்பிட்ட தொகையை தவணையாக அவர் திருப்பி செலுத்தி வந்துள்ளார். மீதமுள்ள கடன் தொகைக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளை நிதி நிறுவனத்திடம் சதன் திருமலைக்குமார் வழங்கி உள்ளார்.

அந்த காசோலைகளை வங்கியில் நிதி நிறுவனம் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து, சதன் திருமலைக்குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு, நிதி நிறுவனம் தரப்பில் அதன் இயக்குநரால் 2019ல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

எம்.எல்.ஏ., என்பதால், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின், சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை, 3வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் முன்னிலையில் நடந்து வந்தது.

நிதி நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் எம்.சின்னதம்பி ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் நேற்று பிறப்பித்த தீர்ப்பு:

காசோலை மோசடி வழக்கில், சதன் திருமலைக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படுகிறது.

மேலும் 3 மாதம் மேலும், கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாயை, இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்ய இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.




@quote@ எம்.எல்.ஏ., பதவி பறிபோகும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் எட்டாவது பிரிவின்படி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல், ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, தீண்டாமையை பின்பற்றுதல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் போன்ற வழக்குகளில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு அபராதம் விதித்தாலே, ஆறு ஆண்டுகளுக்கு தகுதி இழப்பு ஏற்படும். தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால், மற்ற குற்றங்களை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி உடனே தகுதி இழக்கிறார். அத்துடன் ஆறு ஆண்டு களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு வேளை, தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்குகளில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் தடை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதியின் தகுதி இழப்பு நீங்கி பதவியில் நீடிக்கலாம். அந்த வகையில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார், தகுதி இழப்பை எதிர்கொண்டுள்ளார். ஒரு வேளை, மேல்முறையீட்டு வழக்கில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் தடை உத்தரவை பெற்றால் மட்டுமே பதவியில் அவர் நீடிக்கலாம். ---இதேபோல அவதுாறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, எம்.பி. பதவியில் அவர் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.quote
------------

Advertisement