மொபைல், கஞ்சா பயன்படுத்தும் கைதிகள் விசாரணைக்கு டி.ஜி.பி., தலைமையில் குழு

துமகூரு: சிறைகளில் கைதிகள் கஞ்சா, மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் உள்ள சிறைகளில் கைதிகள் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, மொபைல் போன் உபயோகிப்பது குறித்த வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

முக்கிய குற்றவாளிகள் பலரும் சிறையில் இருக்கும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையிலும் கைதிகள் ஜாலியாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகின.

இதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறைகளில் சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் சோதனை நடத்துவார். இச்சோதனையின் போது, மொபைல் போன்கள், சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகளும் வெளியாகும். இருப்பினும், சிறைக்குள் கைதிகள் ஜாலி தொடர்ந்தபடி இருந்தது.

இது குறித்து, நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:

பரப்பனஅக்ரஹாரா சிறை உட்பட பல சிறைகளிலும் கைதிகளிடம் கஞ்சா, மொபைல் போன் பயன்பாடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இது அரசு கவனத்திற்கு வந்து உள்ளது.

இதை எதிர்த்து சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், சிறைகளுக்குள் சென்று கைதிகளிடம் சோதனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்வார். இக்குழுவின் விசாரணை வழக்கம் போல இருக்காது.

சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா 'சப்ளை' செய்வதில் சிறைத்துறை வார்டன், போலீசாருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும். விசாரணையில், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தால் தாமதமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement