தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில், கேரளாவின் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன.

இந்நிலையில், கேரளாவின் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1951, பிரிவு 135(பி)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் அல்லது இதர அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து தமிழக வாக்காளர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.

பணியாளர்களின் ஊதியத்தில் எந்தவித பிடித்தமும் செய்யக் கூடாது. தினக்கூலி அடிப்படையில் வேலை செய்பவர்களுக்கும், 'ஷிப்டு' முறையில் பணிபுரிவோருக்கும் இந்த சலுகை உண்டு.

இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கேரள அரசு எச்சரித்துள்ளது.

Advertisement