அதிகாலையில் தீ விபத்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

புதுடில்லி:வீட்டில் பற்றிய தீயில் சிக்கி, மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழந்ததார். காயம் அடைந்த அவரது சகோதரர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்திய டில்லி பஹார்கஞ்ச் சுனா மண்டி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்தவர் ரமேஷ்,60. மாற்றுத் திறனாளி. அவரது சகோதரர் நரேஷ்,58. நேற்று அதிகாலை 2:30 மணிக்கு ரமேஷ் வீட்டில் தீப்பற்றி, வேகமாக பரவியது. தகவல் அறிந்து, இரண்டு வண்டிகளில் தீயணைப்பு படையினர் வந்தனர். வீட்டுக்குள் சிக்கித் தவித்த இருவரையும் மீட்டு, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனை செய்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். நரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகாலை 3:10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் கருகி சாம்பலாகின.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எரிந்தது மருந்தகம்

கிழக்கு டில்லி லட்சுமி நகரில் அமைந்துள்ள அரசு மருந்தகத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, நான்கு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், மதியம் 12:15 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேத மதிப்பு கணக்கிடும் பணி நடக்கிறது.

Advertisement