ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் உளுந்துார்பேட்டை முடிவு தாமதம்

தியாகதுருகம்: உளுந்துார்பேட்டை தொகுதியில் 2 ஓட்டு பதிவு இயந்திரம் பழுதானதால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

உளுந்துார்பேட்டை தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது 3வது சுற்றில் 36 வது பூத் ஓட்டுபதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதில் 856 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அதேபோல் நான்காவது சுற்றில் 53 வது பூத் ஓட்டு இயந்திரம் பழுதானது. இதில் 685 ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது.

இவை இரண்டையும் தனியாக வைத்துவிட்டு மற்ற இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது. கடைசி சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போது பழுதான 2 இயந்திரங்களின் பதிவான ஓட்டுக்களை வி.வி.பாட் திறக்கப்பட்டு அதில் பதிவான சீட்டுகளை கொண்டு ஓட்டுகள் கணக்கிடப்பட்டு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது. இதனால் 6:00 மணிக்கு அறிவிக்க வேண்டிய முடிவு ஒரு மணி நேரம் தாமதமானது.

Advertisement