முதல்வர் அரியாசனத்தில் விஜயை அமர்த்திய இளைஞர் பட்டாளம்: 'இளைஞர்களை கட்சியில் சேருங்கள்' என திமுக, அதிமுக.,வில் போர்க்குரல்

6

மதுரை: தி.மு.க., -அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக இளைஞர்களின் எழுச்சியால் த.வெ.க., முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 107 இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்றார். இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத தி.மு.க., அ.தி.மு.க.,வில் 'இனியாவது இளைஞர்களை சேர்க்க பாருங்கள்' என போர்க்குரல் எழுந்துள்ளது.

தமிழகத்தை அரை நுாற்றாண்டாக ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. இந்தாண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் த.வெ.க., தலைவர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களின் ஆர்ப்பரிப்பும், எழுச்சியும் இருந்தது.

த.வெ.க.,வுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் 'ரீல்ஸ்' அதிகளவில் வந்ததற்கு காரணமும் இளைஞர்கள்தான். தி.மு.க., அ.தி.மு.க.,வில் இளைஞர்கள் இருந்தாலும், த.வெ.க.,வில் இருக்கும் எண்ணிக்கையைவிட குறைவு என்பதுதான் உண்மை.

தி.மு.க.,வில் இளைஞரணி செயலாளராக இருப்பவர் 49 வயதான உதயநிதி. இப்பிரிவின் உறுப்பினராக இருப்பவர்கள் பலரும் அவரை விட 'சீனியர்கள்'. 'ஜென்' இளைஞர்களுக்கு ஈடுகொடுக்க முடியாத 'பழமைவாதிகள்'.

கட்சி கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'இளைஞரணியில் 30 வயதுக்குள் உள்ளவரே இருக்க முடியும்' என்றார். அதை அவர் செயல்படுத்த முடியாத நிலையில், 'தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்' எனக் கூறினார். ஆனால் அடுத்தடுத்து வந்த சிபாரிசுகளால் மோகன் கார்த்திக், தமிழன் பிரசன்னா உள்ளிட்ட சிலருக்குதான் 'சீட்' வழங்கப்பட்டது.

தி.மு.க.,வில் இனி இளைஞர்களுக்குதான் முக்கியத்துவம் தரவேண்டும் என்று மறைமுகமாக முன்னாள் எம்.எல்.ஏ., எழிலன் '60 வயது மேற்பட்டோருக்கு கட்சியில் 'சீட்' வழங்கக்கூடாது' என 'மீம்ஸ்' வெளியிட்டது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.

அதேசமயம் த.வெ.க.,வில் 234 தொகுதிகளில் போட்டியிட்டவர்களில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள்தான். த.வெ.க., அரசில் 29 வயதான கீர்த்தனா அமைச்சராக நியமிக்கப்பட்டார். 30 வயதான சபரிநாதன் அரசின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார். அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இன்னும் சில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க.,வில் இளைஞர், இளம்பெண்கள் பேரவை, எம்.ஜி.ஆர்., இளைஞரணி உள்ளன. இங்கும் 'இளைஞர்களாக' 40 வயதை கடந்தவர்களே உறுப்பினராக உள்ளனர். இளைஞர்கள் பலர் தகவல் தொழில்நுட்பப்பிரிவில் இருக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் உட்கட்சி பிரச்னை தொடர்பாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசிய பொதுச்செயலாளர் பழனிசாமி, த.வெ.க., அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு, 'கட்சியில் இளைஞர்களை அதிகளவில் சேர்க்க பாருங்கள்' என்றார்.

அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் கட்சி வளாகத்தில் இருந்த பலரும் 'இளைஞர்கள்தான் இனி தேவை. நாம் அவர்களுக்கு வழிவிடுவோம்; வழிகாட்டுவோம்' என்று 'போர்க்குரல்' எழுப்பினர்.

Advertisement