காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்கணும்; ஆணையர்களுக்கு உத்தரவு

19


கோவை: உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படையான, தரமான சேவை மக்களுக்கு வழங்க ஆணையர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. துறையின் கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு, அன்றாடம் பணியில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

அதில், 'மக்களுக்கு வெளிப்படையான மற்றும் கால தாமதமின்றி சேவை வழங்க முதல்வர் கூறியுள்ளார். சுகாதாரம் குறித்து ஆணையர்கள் தினசரி காலை 7:00 மணிக்கு முன்பாக களத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

பொது கழிப்பறைகள், பஸ் நிலையங்களில் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து, துாய்மையாக பராமரிக்க வேண்டும். 'பணியாளர்களின் வருகைப்பதிவு தினசரி கண்காணிக்க வேண்டும். தேவையற்ற விடுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். சாலைகளில் படிந்துள்ள மண் தினசரி அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

ரிசர்வ் சைட், நீர்நிலைகள், சாலையோரங்களில் மரம் வளர்த்து பசுமை பரப்பை உருவாக்க வேண்டும். பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பழுதாகியுள்ள தெருவிளக்குகளை, 24 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும்

'குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளின் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சரி செய்ய வேண்டும். கட்டட அனுமதியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விதி மீறினால், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

Advertisement