வெள்ளை மாளிகையின் ஏஐ ஆலோசகர் பதவியில் இருந்து விலகுகிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்

7

வாஷிங்டன்: அதிபர் டிரம்பிற்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்த சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், தன் பதவியில் இருந்து இம்மாதம் இறுதியில் விலகுவதாக அறிவித்தார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் வகித்து வரும் எனது பொறுப்பிலிருந்து நான் விலகவுள்ளேன். சிறிது இடைவேளைக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிர்கொள்ளும் சில முக்கிய சவால்களைச் சமாளிக்க உதவும் பணிகளில் ஈடுபடவுள்ளேன்.


@quote@அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதையும், அதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. quote
முதலாவதாக, அதிபர் டிரம்பின் தலைமையின் கீழ் பணியாற்றியது எனக்குக் கிடைத்த கவுரவம் ஆகும். அவரது தலைமைத்துவம் இல்லாவிட்டால், செயற்கை நுண்ணறிவு துறையில் நிலவும் போட்டியில் நாம் முன்னணியில் இருந்திருக்க முடியாது. தன்னுடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?



* ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்

* கடந்த 18 மாதங்களாக டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், அமெரிக்காவின் தேசிய ஏஐ கொள்கை மற்றும் அமெரிக்க ஏஐ செயல் திட்டம் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

* தனது 21 வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியைத் தொடங்கிய இவர், பின்னர் பேஸ்புக், யாகூ, ஸ்னாப்சாட் மற்றும் எக்ஸ் சமூக வலைதளம் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

Advertisement