ஈரானுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: அதிபர் டிரம்ப் மிரட்டல்

1

வாஷிங்டன்: ஈரான் நாட்டிற்குத் தங்கள் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மூலம் எந்த வகையிலாவது உதவிகளை வழங்கும் எந்தவொரு நாடும், கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள என்னை விடச் சிறந்த வாய்ப்பை வேறு யாரும் வழங்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.

எனவே, இன்று, எந்தவொரு நாட்டின் மீதும் இதுவரை மேற்கொள்ளப்படாததிலேயே மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை நான் அறிவிக்கிறேன். இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தலாக அமையும்.

ஈரானின் கடற்படை செயலிழந்துவிட்டது, விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டது. ராணுவத் தொழிற்சாலைகள் தரைமட்டமாகிவிட்டன. அவர்களின் நாணயம் மதிப்பற்றதாகிவிட்டது.

மேலும் அந்நாடு மிக மோசமான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஈரான் நாட்டிற்குத் தங்கள் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மூலம் எந்த வகையிலாவது உதவிகளை வழங்கும் எந்தவொரு நாடும், கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

எண்ணெய் கடத்தல், நாணயப் பரிமாற்ற ஏற்பாடுகள், பணப் பரிமாற்றங்கள், கப்பல் பதிவு சேவைகள் மற்றும் பினாமி நிறுவனங்கள் என அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். இது ஒரு பொருளாதார நடவடிக்கை நாள் ஆக இருக்கும்; ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்கவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் அமெரிக்காவுடன் எங்கள் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

இந்த வெறிபிடித்தவர்கள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளனர்; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் அவர்களை முடக்குவதுடன், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்பும் அவர்களின் திறனையும் அழித்துவிடும். ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement