புலியுடன் செல்பி எடுத்தபோது நகத்தில் கீறியது; தொற்றுக்கு ஆளான சிறுமி மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்பு

5


-நமது சிறப்பு நிருபர்-
தாய்லாந்தில் புலியுடன் செல்பி எடுத்துக் கொண்ட 5 வயது இந்திய சிறுமி, புலியுடன் விளையாடிய போது லேசான நகக்கீறலுக்கு ஆளானார். இதனால் கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு ஆளான சிறுமி, மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தார்.

தாய்லாந்து நாடு இந்திய சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. அங்குள்ள வன உயிரியல் பூங்காவில் புலியுடன் பார்வையாளர்களை செல்பி எடுக்க பூங்கா ஊழியர்கள் அனுமதிக்கிறார்கள்.

அங்கு புலிகளை தடவிக்கொடுப்பதிலும், அருகில் சென்று புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி செல்பி எடுக்கும் போதும் புலியை தொட்டு தடவும் போதும் இருக்கும் ஆபத்துகள் யாருக்கும் தெரிவதில்லை.


லேசான காயம்




பட்டாயாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு குடும்பத்தினருடன் 5 வயது சிறுமி சென்றார். குடும்பத்தினர் செல்பி எடுக்க முயன்றபோது சிறுமி புலியை தடவிக் கொடுத்தார்.அப்போது ​​புலி ஏற்படுத்திய கீறலால் அந்தச் சிறுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சிறுமிக்கு உடனடியாக தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியா திரும்பிய பிறகு, இரண்டு வாரங்களுக்குள் தொடைகள், முகம் மற்றும் உடற்பகுதியில் கடுமையான தடிப்புகள் ஏற்பட்டன. தொடர்ந்து, அவருக்கு அதிக ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தன.


காய்ச்சல், வாந்தி, கடுமையான வயிற்று வலி, அதிக இதயத் துடிப்பு மற்றும் சுவாசக் கோளாறுகள் காரணமாக, ஜூலை 10ம் தேதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் நோயெதிர்ப்புத் துறை டாக்டர் பிரியங்கா சின்ஹா சிகிச்சை அளித்தார்.


டிஸ்சார்ஜ்




புலி கீறியதால் சிறுமிக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாகவும் அதுதான் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவ குழுவினரின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தொற்றுக்கு ஆளான சிறுமி மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டார். 13 நாட்கள் ஆன பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

விலங்குகளால் ஏற்படும் எந்தவொரு கீறல் அல்லது கடி, அது மேலோட்டமாக இருந்தாலும், சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவி, உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; தெரு நாய்கள், பூனைகள் மற்றும் குரங்குகளால் கீறல் ஏற்பட்டாலும் கூட, இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


@block_P@

அலட்சியம் கூடாது!

இந்த சம்பவம் பாம்புகள், பறவைகள் மற்றும் புலிகளுடன் புகைப்படம் எடுக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அலட்சியம் கூடாது என எச்சரிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் உள்ள பூங்காவில் புலிகளுடன் புகைப்படம் எடுப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்கு புலிகள் பொதுவாக அரை மயக்க நிலையில் வைக்கப்படுகின்றன. இதனால் செல்பி எடுக்க வருபவர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல் சம்பவங்களில் விலங்குகள் ஈடுபடுவதில்லை.

எனினும், ஆர்வக்கோளாறில் தொட்டு தடவி விளையாடுவோர் மீது விலங்குகளின் நகங்கள் பட்டு காயம் ஏற்படுத்தி விடுகின்றன. அதை பலரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அத்தகைய நக கீறல்கள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சியாக உள்ளது. எனவே விலங்குகளுடன் செல்பி எடுப்பது போன்ற விபரீத செயல்களை தவிர்ப்பதே சுற்றுலாப் பயணிகளுக்கு நல்லது.block_P

Advertisement