பிரான்ஸ் கால்பந்து வீரர் கிரீஸ்மேன் ஓய்வு

பாரிஸ்: பிரான்சின் கிரீஸ்மேன், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பிரான்ஸ் கால்பந்து வீரர் அன்டோயின் கிரீஸ்மேன் 33. கடந்த 2014ல் நெதர்லாந்துக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டி மூலம் பிரான்ஸ் அணியில் அறிமுகமானார். இதுவரை 137 போட்டிகளில் பங்கேற்று, 44 கோல் அடித்துள்ளார். 'பிபா' உலக கோப்பை (2018), நேஷன்ஸ் லீக் (2020-21) கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். கடைசியாக, கடந்த செப். 9ல் லியானில் (பிரான்ஸ்) நடந்த பெல்ஜியம் அணிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்றார்.

வரும் 2026ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடர் வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிரீஸ்மேன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்மூலம் இவரது 10 ஆண்டு கால சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. உள்ளூர் போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இவர், ரியல் சோசிடாட், பார்சிலோனா அணிகள் சார்பிலும் பங்கேற்றுள்ளார்.
அதிக கோல் அடித்த பிரான்ஸ் வீரர்கள் வரிசையில் 4வது இடத்தில் உள்ளார் கிரீஸ்மேன். முதல் மூன்று இடங்களில் ஆலிவர் ஜிராட் (57 கோல்), தியரி ஹென்ரி (51), எம்பாப்பே (48) உள்ளனர்.

Advertisement