ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு மறுப்பு; மறுஆய்வு செய்யும்படி 'அட்வைஸ்'

3


சென்னை : ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு மறுக்கப்பட்ட இடங்களில், அனுமதி வழங்குவது குறித்து மறுஆய்வு செய்து தெரிவிக்கும்படி, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விஜயதசமியை ஒட்டி தமிழகம் முழுதும் 58 இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.



இதற்கு அனுமதி கோரி, அந்தந்த மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் சார்பில், போலீசாரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

ஊர்வலம்



இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். 'ஊர்வலத்துக்கான மாற்று தேதி; ஊர்வலம் துவங்கும் இடம், முடியும் இடம்; எவ்வளவு பேர் பங்கேற்பர்; யார் தலைமையில் நடக்கிறது என்ற விபரங்கள் இல்லை' என்றார்.



இதையடுத்து, போலீஸ் தரப்பில் கேட்கும் விபரங்களை அளிக்கும்படி மனுதாரர்களுக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், “ஊர்வலத்துக்கு, 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; 16 இடங்களில் நிராகரிக்கப்பட்டு உள்ளது.


''ஒரு மாவட்டத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்டதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதுபோன்ற இடங்களில் நிராகரிக்கப்பட்டு உள்ளது,” என்றார்.


மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'நேர கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். அரசும், போலீசும் கண்ணாமூச்சி ஆடுகின்றனர்' என்றனர்.

பாதுகாப்பு



இதையடுத்து, நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரித்த நீதிபதி, ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை கூறி, அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.


ஒரு மாவட்டத்தில், ஒரு இடத்துக்கு மேல் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது என்கிற போது, பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில், பல இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது; இந்த அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன என்றும், நீதிபதி கேள்வி எழுப்பினார்.


அதைத் தொடர்ந்து, மறுக்கப்பட்ட இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விதித்த நிபந்தனைகளை மறுஆய்வு செய்தும் தெரிவிக்கும்படி போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement