குப்பை மேடான நிழற்குடை போந்துார் பயணியர் அவதி

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் போந்துார் ஊராட்சி உள்ளது. இங்கு, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை உள்ளது.

அப்பகுதியினர், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால், பயணியர் நிழற்குடையினை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள், நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துவதாக, அப்பகுதியினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், நிழற்குடையினை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement