பத்திரப்பதிவுக்கு மறுப்பு; பதிவாளருக்கு அபராதம்

மதுரை : சொத்து விற்பனை பத்திரம் பதிவு செய்ய மறுத்த துாத்துக்குடி மாவட்டம், கடம்பூர் சார் - பதிவாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.


கடம்பூர் பாண்டி தாக்கல் செய்த மனு: ஒரு சொத்து தொடர்பான விற்பனை பத்திரத்தை பதிவு செய்யக்கோரி, கடம்பூர் சார் - பதிவாளரிடம் விண்ணப்பித்தேன். சொத்து தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிவு செய்ய இயலாது எனக்கூறி நிராகரித்தார். அவரின் செயல் சட்டவிரோதமானது. நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


நீதிபதி என்.சதீஷ்குமார்: சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணமாக கூறி பத்திரத்தை பதிவுசெய்ய மறுக்கக் கூடாது என, பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மனுதாரர் அணுகியபோது ஆட்சேபனை இருப்பதாக கூறி, சார் - பதிவாளர் பதிவுசெய்ய மறுத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் செயல்பட்ட சம்பந்தப்பட்ட சார் - பதிவாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தொகையை உயர் நீதிமன்றக் கிளை வளாகத்திலுள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement