உங்களின் 125 வயசு வரை மோடி தான் பிரதமர்! கார்கேவை ஸ்பெஷலாக வாழ்த்திய ராஜ்நாத்

3

சண்டிகர்; மல்லிகார்ஜூன கார்கே 125 வயது வரை வாழவேண்டும், அதுவரை மோடி தான் பிரதமர் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.



ஜம்முகாஷ்மீரில் தேர்தல் பிரசார மேடையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீரென மயங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார். அப்போது தனக்கு 83 வயதாகிறது, அவ்வளவு சிக்கிரம் இறந்துவிட மாட்டேன், ஆட்சி அதிகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை அகற்றும் வரை உயிர் போகாது என்று பேசியிருந்தார்.

இந் நிலையில் மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சுக்கு பா.ஜ. மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் பதிலடி தந்துள்ளார். ஹரியானாவில் சார்கி தாத்ரி என்ற பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியதாவது:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். நேற்றைய கூட்டத்தில் அவருக்கு உடல்நிலை பாதித்த போதும், பிரதமர் மோடியை பதவியில் இருந்து அகற்றும் வரை உயிருடன் இருப்பேன் என்று கூறி இருக்கிறார்.

அவருக்கு நான் ஒன்று கூறிக் கொள்கிறேன். நீங்கள் 125 வயது வரை வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அதுவரை மோடி தான் தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும்.

ஹரியானாவுக்கு ஒரு ஊழலற்ற முதல்வர் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். அதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஊழல் பற்றிய எந்த புகார் வந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement