நோயிலிருந்து காக்கும் ஸ்பிரே

கொரோனா முதலிய நோய்கள் முதலில் தாக்குவது சுவாச மண்டலத்தைத் தான். பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போது அவர் மூக்கின் வழியே வெளியேறும் கிருமிகள் காற்றில் கலக்கின்றன. வேறு ஒருவர் சுவாசிக்கும்போது அந்தக் கிருமிகள் அவர் மூக்கில் நுழைகின்றன.

அங்கு சில காலம் தங்கி இனப்பெருக்கம் செய்த பின்பே நுரையீரலைத் தாக்குகின்றன. இத்தகைய நோய்களுக்குத் தடுப்பூசிகள் உள்ளன. என்றாலும் மூக்கில் தங்குகின்ற காலத்திலேயே அவற்றை அழித்துவிட்டால் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

கிருமிகளை அழிக்க மருந்துகளும் உள்ளன. ஆனால் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்கும்போது கிருமிகளும் அவற்றின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டு பலம் அடைகின்றன.

எனவே மருந்தே இல்லாமல் கிருமிகளை அழிக்கும் வழியை உருவாக்க விஞ்ஞானிகள் குழு தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தது. அதன் பயனாக உருவானது தான் பிகான்ஸ் (Pathogen Capture and Neutralizing Spray - PCANS). அதாவது கிருமிகளைப் பிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் ஸ்பிரே.

இதை மூக்கில் அடித்தால், இது ஒரு ஜெல் போல் மூக்கின் உட்சுவர்களில் படிந்துவிடும். இது நம் சுவாசத்தை எந்த வகையிலும் பாதிக்காது.

ஆனால், உள்ளே வருகின்ற பாக்டீரியா, வைரஸ்களைப் சிக்க வைத்துக் கொள்ளும். அவை நகரமுடியாமல், பெருக முடியாமல் அப்படியே இறந்துவிடும். ஆய்வுக்கூடத்தில் எலிகள் மீது இதைச் சோதித்துப் பார்த்தனர். மூக்கில் H1N1 வைரஸ் இருந்த எலிகளுக்கு ஸ்பிரே அடித்துப் பார்த்தனர். 99.99 சதவீத வைரஸ்கள் இறந்துவிட்டன.

இந்த ஸ்பிரே 8 மணி நேரம் மூக்கில் இருந்தது. 4 மணி நேரம் கிருமிகளைக் கட்டுப்படுத்தியது. 3 டி பிரின்டிங்கில் உருவாக்கப்பட்ட மனித மூக்கிலும் இது சோதிக்கப்பட்டது. இது மிக ஆபத்தான பல வைரஸ், பாக்டீரியாவை அழித்தது.

மருந்தே இல்லாமல் நோயைக் கட்டுப்படுத்தும் இந்தப் புதிய ஸ்பிரே நல்ல வரவேற்பைப் பெறும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கணித்துஉள்ளனர்.

Advertisement