சமையல்காரர் மர்ம நபர்களால் படுகொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம், அருள்புரத்தில் டாஸ்மாக் மதுக்கூடம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒருவர் இறந்து கிடந்தார். தலையில் கல்லால் தாக்கப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

பல்லடம் போலீசார் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட நபர் பெரம்பலுாரை சேர்ந்த பூபாலன், 41. பல்லடம் குன்னாங்கல்பாளையத்தில் தங்கி பேக்கரியில், சமையல் வேலை செய்து வந்தார்.

கடந்த 6ம் தேதி காலையில் மதுக்கடை மதுக்கூடத்துக்கு மது அருந்த சென்றவர், இரவுபோதையில் மதுக் கூடத்துக்கு வெளியே விழுந்து கிடந்தார்.

அங்கு வந்த, இருவர் அவரை துாக்கி சென்றது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது. மறுநாள் காலையில், 50 மீட்டர் துாரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலை எதற்காக நடந்தது, துாக்கி சென்ற, இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement