லஞ்சம் வாங்கிய இன்ஸ்.,சுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

கொல்லங்குடி: சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர், அன்புமலை கண்ணன் என்ற சாது மங்கலசாமி. 2010ல் இவரது பேத்திக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்னை இருந்தது. இது குறித்து காளையார்கோவிலில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செங்குட்டுவன், 60, விசாரித்தார். அன்புமலை கண்ணன் தன் பேத்திக்கு சீதனமாக கொடுத்த, டூ - வீலரை அவரது கணவரிடமிருந்து பெற்று கொடுக்க, இன்ஸ்பெக்டர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்புமலை கண்ணன், சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய நோட்டுகளை, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம், 2010 ஜூலை 2ல், அன்புமலை கண்ணன் கொடுத்தார்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், செங்குட்டுவனை கைது செய்தனர். இவ்வழக்கில் செங்குட்டுவனுக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி செந்தில் முரளி தீர்ப்பளித்தார்.

Advertisement