கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி அழைத்து சென்றவருக்கு காயம்

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், காவேரி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 26, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார்.

இவரின் தந்தை கிருஷ்ணன், கோவை மருத்துவமனையில், புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுகிறார். அவரை பார்க்க கலைச்செல்வன், காரில் நேற்று புறப்பட்டார்.

இதையறிந்த அவரது நண்பர் ஒருவர், தனக்கு தெரிந்த இரு பெண்களை கோவையில் இறக்கி விடும்படி கூறினார்.

அதன்படி, அந்தியூர், மைக்கேல்பாளையம் கணபதி மனைவி சவுந்தர்யா, 25; கோவை, சுந்தராபுரம், பட்டுராஜ் மகள் ரிஸ்வானா, 20, ஆகியோரை, தன், 'சான்ட்ரோ' காரில் ஏற்றிக்கொண்டு கோவைக்கு கலைச்செல்வன் புறப்பட்டார்.

நசியனுார் சாலை வில்லரசம்பட்டி நான்கு ரோடு அருகே, அதிகாலை 4:00 மணிக்கு சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், மின் கம்பம் மற்றும் மரத்தில் மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், இரு இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வீரப்பன்சத்திரம் போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலைச்செல்வனை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காரை அதிவேகமாக, அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக,அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement