பயிற்சி டாக்டர்களுக்கு 10 நேரம் பணி: மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை 

பொள்ளாச்சி : சிறப்பு பயிற்சி டாக்டர்களுக்கு, 10 மணி நேரம் மட்டுமே பணி ஒதுக்க வேண்டும் என, அரசு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் உட்பட, 13,211 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில்,மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவனைகளில், நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை வழங்க,சுழற்சி முறையில், 24 மணி நேரம் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் மேற்பார்வையில், சிறப்பு பயிற்சி டாக்டர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, சிறப்பு பயிற்சி டாக்டர்களுக்கு, பணிச்சுமை மற்றும் மனஅழுத்தும் ஏற்படாத வகையில் பணி ஒதுக்க வேண்டும். மேலும், 10 மணி நேரம் மட்டுமே பணிபுரியச் செய்து, உரிய நேரத்திற்குள் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும், என, மருத்துவப் பணிகள் இயக்குனரகம் வாயிலாக, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement