மத்திய அதிகாரிகள் சிறப்பு கவனம்: ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி

திருப்பூர் : மத்திய ஜவுளித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அடுத்தடுத்து நேரடியாக வந்து சந்திப்பதால், கோவை மற்றும் திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மந்தநிலை, உக்ரைன் - ரஷ்யா போர்சூழல் என, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜவுளி ஏற்றுமதி பல்வேறு சோதனைகளை சந்தித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஜவுளி ஏற்றுமதியில் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அனைத்து ஜவுளித்துறை அதிகாரிகள் குழுவினர்,கடந்த மாதம் 11ம் தேதி கோவை, திருப்பூர் தொழில் அமைப்பினரை சந்தித்து, கோரிக்கையை கேட்டறிந்தனர்.

ஜி.எஸ்.டி., - சுங்கவரித்துறை, வெளிநாட்டு வர்த்தக பிரிவு அதிகாரிகள், வருமானவரித்துறை என, முக்கிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள், கடந்த வாரம், திருப்பூரில் ஏற்றுமதியாளர்களை சந்தித்தனர்.

மத்திய ஜவுளித்துறை செயலர் ரச்னா ஷா, இணை செயலர் ராஜிவ் சக்சேனா ஆகியோர், கடந்த 4ம் தேதி கோவையிலும், 5ம் தேதி திருப்பூரிலும், தொழில்துறையினரை சந்தித்து பேசினர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் 'நிட் பிரின்டர்ஸ்' உரிமையாளர்கள் சங்கம், பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து, கோரிக்கையை கேட்டறிந்தனர்.

திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக, நுாற்பாலைகள் முதல் அனைத்து ஜவுளி பிரிவுகளும், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இயல்புநிலை திரும்பியிருந்தாலும், பின்னலாடை தொழில் அடுத்தகட்டத்துக்கு முன்னேற மத்திய அரசு உதவி தேவைப்படுகிறது.

தொழில் நிலவரத்தை அறிய நேரில் சந்தித்து, கோரிக்கையை கேட்டறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் கோரிக்கை, அரசு கவனத்துக்கு சென்றது நிம்மதியாக இருக்கிறது,' என்றனர்.

Advertisement