விளையாட்டு செய்திகள் சர்வதேச செஸ் போட்டி 17 வீரர்கள் முன்னிலை

சென்னை:சென்னையில் நடந்து வரும் சர்வதேச செஸ் போட்டியில், நான்காம் சுற்று முடிவில், 17 வீரர்கள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

சென்னையில் இயங்கி வரும் மவுன்ட் செஸ் அகாடமி சார்பில், 9ம் ஆண்டு, வெங்கட்ராமன் நினைவு கோப்பை சர்வதேச செஸ் போட்டி, தாம்பரம் அடுத்த சந்தோசபுரம் நியூ பிரின்ஸ் பவானி பொறியியல் கல்லுாரி அரங்கில், கடந்த 10ம் தேதி துவங்கியது.

முதல் பரிசு 60,000 ரூபாய் உட்பட, மொத்தம் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை உள்ள இப்போட்டியில், 297 'பிடே ரேட்டிங்' வீரர்கள் உட்பட, நாடு முழுதும் இருந்து 503 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகள் எட்டு சுற்றுகளாக நடக்கின்றன.

நேற்று முன்தினம் நான்காம் சுற்றுகள் முடிந்த நிலையில், சந்தோஷ் ஹரிஹரன் ரவிச்சந்திரன், வினோத்குமார், ராஜசூர்யா உட்பட 17 வீரர்கள், தலா 4 புள்ளிகளுடன், முதலிடத்தில் உள்ளனர்.

நான்காம் சுற்று ஆட்டத்தில், வழக்கத்திற்கு மாறான தொடக்க நகர்வுகளுடன் ஆட்டத்தை துவங்கிய சர்வதேச வீரர் பாலசுப்ரமணியத்தை, தமிழக இளம் வீரர் சந்தோஷ் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இறுதிச் சுற்று போட்டிகள் இன்று நடக்கின்றன.

Advertisement