டில்லி 'உஷ்ஷ்ஷ்!' ; மத்திய அரசு கவலை!



காஞ்சிபுரத்தில் உள்ள, சாம்சங் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்னை, தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.டி.யு., அமைப்பு இந்த தொழிற்சாலையில் யூனியன் துவங்க வற்புறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.


வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈர்க்க, சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தார், தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால், 'இந்த வேலை நிறுத்தத்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் வர தயங்க, இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது' என, மத்திய அரசு கருதுகிறது. இதனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.


இந்த விவகாரத்தில், சுமுகமாக தீர்வு காணும்படி, தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை அளித்துள்ளதாம். வெளியுறவுத்துறை அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், 'சீனாவை விட்டு, இந்தியாவிற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நல்லதல்ல... இந்த வேலை நிறுத்தத்தில், வெளிநாட்டு சதி நிச்சயம் இருக்கும். சி.ஐ.டி.யு., யூனியன் எந்த நாட்டிற்கு சார்பாக உள்ளது என்பது, அனைவருக்கும் தெரியும்.


சாம்சங் விவகாரத்தால், தென் கொரியா நிறுவனங்களுக்கு பிரச்னை ஏற்பட்டு, சீனாவின் மொபைல் போன்களுக்கு மார்க்கெட் அதிகமாகும்; எனவே, தமிழக அரசு மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

இதற்கிடையே, தி.மு.க., - எம்.பி., ஒருவர், மத்திய தொழில்துறை அமைச்சரை சந்தித்து, 'சாம்சங் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்து உள்ளாராம். இவரது குடும்ப உறுப்பினர், தமிழக அமைச்சராக உள்ளதால், அவருடைய துறைக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதில், அந்த சீனியர் எம்.பி., மிகவும் கவனமாக உள்ளாராம்.

Advertisement