'பயணிகளின் கனிவான கவனத்திற்கு…' நாளை முதல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்

1

சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் பயணிகளின் நலன் கருதி நாளை முதல் 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என நிர்வாகம் அறிவித்து உள்ளது.


சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மழை காலங்களில் சொந்த வாகனங்களை இயக்குவதில் சிரமம் என்பதால், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை நாடுவது வழக்கம்.


அதற்கு ஏற்றார் வகையில், முன்னெச்சரிக்கையாக நாளை முதல் 3 நாட்களுக்கு(அக்.,15, 16,17) கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

*விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் 6 நிமிட இடைவெளியிலும்

*வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியிலும்

*சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 5 நிமிட இடைவெளியிலும்

*விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையில் 6 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

எவ்வளவு மழை பெய்தாலும் ரயில் சேவை நிறுத்தப்படாது. 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ள தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ள ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement