கோவையில் பிரபல மருத்துவமனை நர்சுக்கு கத்திக்குத்து; காதல் தகராறில் வாலிபர் வெறிச்செயல்
கோவை; கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நர்சை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
அவிநாசி சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரியா என்பவர் நர்சாக பணியாற்றி வருகிறார். இவரும் நாகர்கோயிலைச் சேர்ந்த சுஜித் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
அண்மைக்காலமாக சுஜித் நடவடிக்கைகள் பிடிக்காததால் பிரியா அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந் நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனை ஹாஸ்டலில் பிரியா தங்கி இருந்த போது அனுமதியின்றி உள்ளே நுழைந்த சுஜித், பிரியாவை கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தியால் குத்தவும் முயன்றுள்ளார்.
அவர் தப்ப முயன்ற போது கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு உள்ளது. அங்கு வந்த ஹாஸ்டல் காப்பாளர்கள், காவலர்கள் சுஜித்தை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனர்.