அருப்புக்கோட்டை புதிய தாலுகா அலுவலக கட்டடத்தில் வயரிங் பணிகள் தீவிரம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் புதிய தாலுகா அலுவலக கட்டடம் திறப்பு விழா கண்டு பல மாதங்களாகியும் செயல்படாமல் இருப்பதை தினமலர் நாளிதழில் செய்தியாக வந்ததையடுத்து வயரிங் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு போதுமான இட வசதி இல்லாததால் மக்கள் வந்து செல்ல சிரமப்பட்டனர்.

இதை கருத்தில் கொண்டு ரூ. 4 கோடி 60 லட்சத்தில் 2 மாடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்க போட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்தது.

பின்னர் சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இருப்பினும் கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே இருந்தது.

புதிய கட்டடத்தில் அலுவலர்களின் பயன்பாட்டிற்கான கம்ப்யூட்டர்களுக்கான வயரிங் வசதிகள் செய்யப்படாமல் இருந்தது. இதனால் அலுவலகம் மாற்றப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.

இதையடுத்து, புதிய கட்டடத்தில் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக கம்ப்யூட்டர் வயர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஒரு சில நாட்களில் முழுமையாக முடிந்து கட்டடம் பயன்பாட்டிற்கு வரும்,என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement