திண்டிவனம் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ராமதாஸ் கண்டனம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849964.jpg?width=1000&height=625)
சென்னை: திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உதவி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த குமார் என்பவர், பொருளாதாரத்துறையில் உதவி பேராசிரியர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த செப்., மாதம் முதல், கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 5ம் தேதி மொபைல்போன் மற்றும் வீடியோ கால் மூலமும் மீண்டும் பாலியல் தொந்தரவு அளித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கண்டிப்பு:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவிக்கு அதே கல்லூரியின் பொருளியல் பேராசிரியர் ஜி.குமார் என்பவர் தொலைபேசி மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தமது விருப்பத்திற்கு இணங்கும்படி மிரட்டல் விடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவ, மாணவியருக்கு நல்லொழுக்கத்தை போதிக்க வேண்டிய பேராசிரியரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மாணவியின் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரைக் காப்பாற்றுவதற்காக வானூர் சட்டசபை உறுப்பினர் சக்கரபாணி தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நின்று அவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய சட்டசபை உறுப்பினர், குற்றவாளியின் பக்கம் நிற்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை அவர் இழிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இத்தகைய சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் முதல் திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலைக்கல்லூரி வரை எண்ணற்ற கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளும், பாலியல் தொல்லைகளும் அளிக்கப்படுவதற்கு காரணம் அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கல்வி நிறுவன நிர்வாகம் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை பலரும் ஆதரவாக இருப்பதும் தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரும், அதற்கு துணை போவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் பணியாமல், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் குமாருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்ததற்கு இணங்க பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரின் கல்விச் சான்றுகளை ரத்து செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
![எவர்கிங் எவர்கிங்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![J.Padmanabhan J.Padmanabhan](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததால் ஓட்டுக்கள் குறையவில்லை; நா.த.க., வேட்பாளர் பேட்டி
-
மக்கள் முடிவை பணிவுடன் ஏற்கிறோம்: ராகுல்
-
ஆம் ஆத்மியிடம் இருந்து டில்லிக்கு விடுதலை: பிரதமர் மோடி
-
கவர்னர் ரவியும், அண்ணாமலையும் பதவியில் தொடர வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
-
தி.மு.க., பெற்றது போலி வெற்றி: இ.பி.எஸ்.,
-
உ.பி., இடைத்தேர்தல்; சமாஜ்வாதிக்கு ஷாக் கொடுத்த பா.ஜ.,